வெள்ளி, டிசம்பர் 27, 2013

சாணக்கியன் சொல்

யாராவது புத்திசாலித்தனமாக செயல்பட்டால் "சாணக்கியன் போல்" என்று சொல்கிறோம். தந்திரத்திலும் சிறந்ததை "சாணக்கிய தந்திரம்" என்றே கூறுகிறோம். அந்த அளவிற்கு அறிவாண்மைக்கும் தந்திரத்திற்கும் பெயர் பெற்றவர் சாணக்கியர்.

சாணக்கியர்
சந்திர குப்த மௌரியரின் அரசவையில் அமைச்சராக விளங்கி குப்தப் பேரரசை நிறுவ சந்திர குப்தருக்கு பேருதவியாக திகழ்ந்தார். அவர் இயற்றிய "அர்த்த சாஸ்திரம்" ஒரு நாட்டு அரசின் செயல்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது. அன்றைய அரசாட்சி அரசுகளுக்கு மட்டுமல்லாது இக்காலத்தின் மக்களாட்சி அரசுகளுக்கும் அர்த்த சாஸ்திரத்தின் கோட்பாடுகள் பொருந்தும்.

அவரது கூற்றுகள் பொருள் பொதிந்தவையாக இருக்கும். சமீபத்தில் ஒரு வலைப்பூவில் (ஆங்கிலத்தில்) படித்த சாணக்கியரின் சிந்தனைகள் கீழே தமிழில்.



1. பிறரது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள ஒரு ஆயுள் போதாது.
2. மிதமிஞ்சிய நேர்மை ஆபத்தானது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படும்; நேர்மையான மனிதர்களே முதலில் குறிவைக்கப்படுவார்கள்.
3. பாம்பு விஷமுடையதானாலும் அதை வெளிக்காட்டக் கூடாது.
4. ஒவ்வொரு நட்புக்கு பின்னும் சுயநலம் உண்டு; சுயநலமற்ற நட்பு என்பது இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
5. ஒரு செயலை தொடங்கும் முன் உங்களை நீங்களே மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்:
     (i)   இதை நான் ஏன் செய்கிறேன்?
     (ii)  இதன் முடிவு என்னவாக இருக்கும்?
     (iii) இதில் நான் வெற்றியடைய இயலுமா?
6. அச்சம் அருகில் வந்தால் அதை தாக்கி அழியுங்கள்.
7. இளமையே உலகின் மிகப்பெரிய சக்தி.
8. ஒரு செயலை துவங்கிய பின் அச்சம் கொண்டு அதை கைவிட வேண்டாம். தொடர்ந்து உழைப்பவர்களே மகிழ்ச்சியானவர்களாக உள்ளனர்.
9. மலரின் மணம் காற்றின் திசையில் மட்டுமே பரவும்; மனிதர்களின் நற்குணம் எத்திக்கும் பரவும்.
10. கடவுள் சிலைகளில் இல்லை; உங்கள் உணர்வுகளே இறைவன்; உங்கள் ஆன்மாவே கோயில்.
11. செயல்களால் மட்டுமே மனிதன் மேன்மையடைகிறான்; பிறப்பால் அல்ல.
12. உங்களைவிட உயர்ந்தவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் நட்பு கொள்ளாதீர்கள்; அவை உங்களுக்கு துன்பத்தையே தரும்.
13. உங்கள் குழந்தைகளை ஐந்து வயது வரை கொஞ்சுங்கள்; பத்து வயது வரை கண்டியுங்கள்; பதினாறு வயதிற்கு பின் நண்பனாக நடத்துங்கள். உங்கள் பிள்ளைகளே உங்களின் சிறந்த நண்பர்கள்.
14. முட்டாளுக்கு புத்தகங்கள், குருடனுக்கு கண்ணாடியை போல.
15. கல்வியே ஒருவனுக்கு சிறந்த நண்பன்; கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு; கல்வி இளமையையும் அழகையும் விஞ்சிவிடும்.