வெள்ளி, டிசம்பர் 27, 2013

சாணக்கியன் சொல்

யாராவது புத்திசாலித்தனமாக செயல்பட்டால் "சாணக்கியன் போல்" என்று சொல்கிறோம். தந்திரத்திலும் சிறந்ததை "சாணக்கிய தந்திரம்" என்றே கூறுகிறோம். அந்த அளவிற்கு அறிவாண்மைக்கும் தந்திரத்திற்கும் பெயர் பெற்றவர் சாணக்கியர்.

சாணக்கியர்
சந்திர குப்த மௌரியரின் அரசவையில் அமைச்சராக விளங்கி குப்தப் பேரரசை நிறுவ சந்திர குப்தருக்கு பேருதவியாக திகழ்ந்தார். அவர் இயற்றிய "அர்த்த சாஸ்திரம்" ஒரு நாட்டு அரசின் செயல்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது. அன்றைய அரசாட்சி அரசுகளுக்கு மட்டுமல்லாது இக்காலத்தின் மக்களாட்சி அரசுகளுக்கும் அர்த்த சாஸ்திரத்தின் கோட்பாடுகள் பொருந்தும்.

அவரது கூற்றுகள் பொருள் பொதிந்தவையாக இருக்கும். சமீபத்தில் ஒரு வலைப்பூவில் (ஆங்கிலத்தில்) படித்த சாணக்கியரின் சிந்தனைகள் கீழே தமிழில்.



1. பிறரது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள ஒரு ஆயுள் போதாது.
2. மிதமிஞ்சிய நேர்மை ஆபத்தானது. நேரான மரங்களே முதலில் வெட்டப்படும்; நேர்மையான மனிதர்களே முதலில் குறிவைக்கப்படுவார்கள்.
3. பாம்பு விஷமுடையதானாலும் அதை வெளிக்காட்டக் கூடாது.
4. ஒவ்வொரு நட்புக்கு பின்னும் சுயநலம் உண்டு; சுயநலமற்ற நட்பு என்பது இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
5. ஒரு செயலை தொடங்கும் முன் உங்களை நீங்களே மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்:
     (i)   இதை நான் ஏன் செய்கிறேன்?
     (ii)  இதன் முடிவு என்னவாக இருக்கும்?
     (iii) இதில் நான் வெற்றியடைய இயலுமா?
6. அச்சம் அருகில் வந்தால் அதை தாக்கி அழியுங்கள்.
7. இளமையே உலகின் மிகப்பெரிய சக்தி.
8. ஒரு செயலை துவங்கிய பின் அச்சம் கொண்டு அதை கைவிட வேண்டாம். தொடர்ந்து உழைப்பவர்களே மகிழ்ச்சியானவர்களாக உள்ளனர்.
9. மலரின் மணம் காற்றின் திசையில் மட்டுமே பரவும்; மனிதர்களின் நற்குணம் எத்திக்கும் பரவும்.
10. கடவுள் சிலைகளில் இல்லை; உங்கள் உணர்வுகளே இறைவன்; உங்கள் ஆன்மாவே கோயில்.
11. செயல்களால் மட்டுமே மனிதன் மேன்மையடைகிறான்; பிறப்பால் அல்ல.
12. உங்களைவிட உயர்ந்தவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் நட்பு கொள்ளாதீர்கள்; அவை உங்களுக்கு துன்பத்தையே தரும்.
13. உங்கள் குழந்தைகளை ஐந்து வயது வரை கொஞ்சுங்கள்; பத்து வயது வரை கண்டியுங்கள்; பதினாறு வயதிற்கு பின் நண்பனாக நடத்துங்கள். உங்கள் பிள்ளைகளே உங்களின் சிறந்த நண்பர்கள்.
14. முட்டாளுக்கு புத்தகங்கள், குருடனுக்கு கண்ணாடியை போல.
15. கல்வியே ஒருவனுக்கு சிறந்த நண்பன்; கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு; கல்வி இளமையையும் அழகையும் விஞ்சிவிடும்.

வியாழன், செப்டம்பர் 19, 2013

தத்துவங்களின் ஆதாரம்

இந்தியாவின் கலாசார பெருமைகளை இந்தியர்களே மறந்துவிட்டிருந்த காலத்தில் அதன் சிறப்புகளை மேற்கத்திய நாடுகளில் நிலைநாட்டியவர் சுவாமி விவேகானந்தர். 1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய பாராளுமன்றத்தில் இந்து சமயத்தின் உயர்வுகளை, அதுவரை இந்து சமயத்தையும் அதன் சித்தாந்தங்களையும் இகழ்ந்து பேசி வந்த மேற்கத்திய அதிமேதாவிகளிடையே (அதிகப்பிரசங்கிகளிடையே?) உரக்க எடுத்துரைத்தார். அவர் அங்கு நிகழ்த்திய ஒற்றை சொற்பொழிவே அவரை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றி வைத்தது. ஒற்றை சொற்பொழிவில் உலக அளவில் உயர்ந்தது என்று இன்று வரை சுவாமி விவேகானந்தரைத் தவிர உலகில் எவரையுமே குறிப்பிட முடியாது.

சுவாமி விவேகானந்தர்
 அவர் சிகாகோ சென்றிருந்தபோது ஒரு நாள் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு அமெரிக்க வாலிபர்கள் விவேகானந்தரையும் இந்திய தத்துவங்களையும் ஏளனம் செய்ய எண்ணினர். மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை எடுத்து வந்து பகவத் கீதையின் மேல் வைத்துவிட்டு ஏளனமாக சிரித்தனர். அவர்களில் ஒருவன், "பார்த்தீர்களா சுவாமி, இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் தத்துவங்களும்கூட மேற்கத்திய தத்துவங்களிடம் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறது. உங்கள் புனித நூலும் எங்கள் தத்துவங்களின் அடியில் சிக்கித்தான் உள்ளது" என்றான்.

விவேகானந்தரோ அமைதியாக அடியில் இருத்த பகவத் கீதையை உருவினார். இதனால் அதன் மேல் இருந்த மேற்கத்திய தத்துவ நூல்கள் சரிந்து கிழே விழுந்தன. பின் அவ்விளைஞர்களைப் பார்த்துக் கூறினார், "உங்கள் தத்துவங்களும் இதை போலத்தான். இந்தியாவும் அதன் தத்துவங்களும் இல்லாவிடில் உங்கள் தத்துவங்களும் இது போலத்தான் சரிந்து விழும்" என்று. மூக்கறுபட்ட அவ்விரு இளைஞர்களும் விவேகானந்தரிடம் மன்னிப்புக்கோரிவிட்டு அந்தப் பூங்காவிலிருந்து அமைதியாக வெளியேறினர்.

திங்கள், ஜூலை 08, 2013

சக்தியின் வடிவம்


இந்து தர்மத்தில் உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது. பிற தர்மங்களில் உருவ வழிபாடு இல்லை என்றும் உருவ வழிபாட்டு முறையே முட்டாள்தனமானது என்றும் கூறுவது சரியல்ல. இதை விளங்கிக்கொள்வதற்கு உருவ வழிபாட்டின் அவசியத்தை நாம் அறிய வேண்டும்.

நிறைந்த ஞானம் கொண்ட தவ யோகிகள் கடவுளை மனதாலேயே தியானிக்க முடியும். ஆனால் ஒரு பாமரன் கடவுளை வழிபட வேண்டுமென்றால் அவனது அறிவிற்கேற்ப கடவுளை அவனுக்கு உணர்த்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் உருவ வழிபாட்டு முறை. பாமரனின் சிற்றறிவிற்குப் புலப்படும் வகையில் இறைவனை சிலையாக வடித்து வைத்தால், இறைவனை வணங்க அவனுக்கு சுலபமாக இருக்கும்.

உருவ வழிபாடு என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. இஸ்லாமியர்கள் மெக்கா உள்ள திசையை நோக்கித் தொழுவதும், கிறிஸ்த்தவர்களின் சிலுவையும் ஒரு வகையில் உருவ வழிபாட்டு முறைகளே.
இந்து தர்மத்தில் சிவனைத் தவிர அனைத்து கடவுள்களும் சிலை வடிவில்தான் வணங்கப்படுகின்றனர் . சிவபெருமான் மட்டுமே லிங்க வடிவில் வணங்கப்படுகிறார். இதைப் பற்றி பல கதைகள் கூறப்படுகிறது. லிங்கம் என்பது சக்தியின் வடிவம். சமஸ்க்ருத மொழியில் 'லிங்கம்' என்றால் 'உருவம்' என்று பொருள்.


சிவலிங்கம் இந்த அண்டத்தில் நிறைந்திருக்கும் சக்தியின் வடிவம். இந்த அண்டத்தில் உள்ள மாபெரும் சக்திகள் அணைத்தும் லிங்க வடிவிலேயே உள்ளன. இதற்கு சிறந்த உதாரணங்கள்: அணு உலை, அணுகுண்டு.

அணுகுண்டு
அணு உலை

இந்து தர்மத்தில் கடைபிடிக்கப்படும் நம்பிக்கைகள் அனைத்தும் (சில அறிவிலிகளால் இடையில் பரப்பப்பட்ட பல முட்டாள்தனங்களைத் தவிர) அறிவியல் பூர்வமானவை. அவை, அன்றைய பாரதத்தில் இருந்த அறிவியல் வளர்ச்சியை பறைசாற்றும். அவற்றை அறிந்து பாதுகாப்பது நம் கடமை.